tamilnadu

img

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: 18 மாநிலங்களில் சாலைகள் ஸ்தம்பித்தன

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுதும் விவசாயிகள் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. 18மாநிலங்களில் சாலைகள் நாள்முழுதும் முற்றாக ஸ்தம்பித்தன. நவம்பர் 26-27 தில்லிப் பேரணிக்கு இது ஒரு மாதிரியே என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கூறினார்கள்.

இப்போராட்டம் தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், மின்சார சட்டமுன்வடிவைக் கண்டித்தும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் பஞ்சாப், ஹர்யானா மாநிலங்களிலுழம், உத்தரப்பிரதேசத்தின் ஒருசில பகுதிகளிலும் மகத்தான முறையில் நடைபெற்று வெற்றிபெற்றுள்ளது.

பட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு, விவசாயிகளுடனும் தொழிலாளர்களுடனும் இணைந்து போராட்டத்தை மகத்தான அளவில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இம்மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகள் அனைத்தும் முற்றுகையிடப்பட்டிருந்தன.

அதேபோன்று, மகாராஷ்ட்ரா, தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒடிசா, அஸ்ஸாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருக்கின்றனர். கேரளாவில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன.

பொதுவாக அனைத்து இடங்களிலும் போராட்டம் அமைதியான முறையில் நடந்திருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. புதுச்சேரி மற்றும் ஹர்யானாவில் போராடியவர்களைக் கைது செய்ததாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.

தொழிலாளர்கள், மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாட தெரிவித்து ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள். அவர்களுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

போராட்டத்தில் விவசாயிகள் காட்டிய கோபாவேசத்தைக் கண்டு, மத்திய மோடி அரசாங்கம் வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அசோக் தாவ்லேயும், ஹன்னன்முல்லாவும் அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

(ந.நி